அரசதரப்பின் அதிகாரத் திணிப்புகளை சட்டரீதியாக நீர்த்துப்போகச் செய்தவர்

அரசதரப்பின் அதிகாரத் திணிப்புகளை சட்டரீதியாக நீர்த்துப்போகச் செய்தவர் சட்டத்துறையில் சாணக்கியமும் அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பாரியாருமான திருமதி கௌரி சங்கரி தவராசா சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்த பல்வேறு குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி நீதியை நிலை நாட்டிய சட்ட ஆளுமை. தமிழ்த்தேசியத்தின் பாதையில் பயணிக்கும் எமது கட்சி மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் காலத்துக்குக் காலம் ஆளும் அரசுகளால் வலிந்து சுமத்தப்பட்ட அதிகாரத் திணிப்புகளையெல்லாம் சட்டரீதியாக நீர்த்துப் போகச் செய்ததில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.விதவராசாவைப் போலவே அவரது பாரியார் திருமதி கௌரி சங்கரிக்கும் பெரும்பங்குண்டு. கொள்கையின் பாற்பட்ட அரசியலுக்கு அப்பால் குடும்ப நண்பர்களாகவும் தனிப்பட்ட சட்ட ஆலோசகர்களாகவும் திருமதி தவராசா தம்பதியினருக்கும் எனக்குமான தனிப்பட்ட உறவு ஆழமானதும் ஆத்மார்த்தமானதுமாகும். நான் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட தொடங்கிய 2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அரசாலும் அரச படைகளாலும் என் மீது வலிந்து மேற்கொள்ளப்பட்ட அத்தனை அச்சுறுத்தல்களையும் கடந்து வருவதில் கௌரி சங்கரி தவராசாவின் பங்கும் வழிகாட்டலும் கனதியானது. 2013ஆம் ஆண்டு அரச படைகளாலும் புலனாய்வாளர்களாலும் எனது அலுவலகம் மீது திட்டமிடப்பட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட எனது அலுவலக உத்தியோகத்தர்கள் இருவரினதும் விடுதலைக்கான சட்டரீதியான முதற்படி இவரின் முன்னெடுப்பே ஆகும் இது போன்றே உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ இளைஞர்களின் விடுதலையை சட்டரீதியாக சாத்தியமாக்கியதிலும் இவருக்குப் பெரும் பங்குண்டு. இன்னமும் அவர் ஆற்ற வேண்டிய பணிகளின் பரப்பு அதிகமாய் உள்ள காலச்சூழலில் யாரும் எதிர்பாராத விதமாய் நிகழ்ந்துள்ள அவர்களின் இழப்பை என்னால் ஏற்க முடியவில்லை.

சிவஞானம் சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்