அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது செயற்பட்டவர் கௌரி சங்கரி

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர் யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்டகாலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரண செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம். தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி தங்கத்துரை போன்ற முக்கியமானவர்களின் வழக்கு விவகாரங்களில் ஆட்சியாளர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களையும் மீறி துணிவோடு நீதிமன்றப்படி ஏறி வழக்காடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு எப்போதும் பக்கபலமாக நின்று வந்திருக்கின்றார். பிரதானமாக குடிமக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு விடயங்களில் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். மனித கடத்தல்கள் திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலைகள் போன்ற வழக்குகளை உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகள் குழுவோடு நின்று அவற்றை நெறிப்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பேசப்பட்ட பிரபல சட்டத்தரணி ஆவார். பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பல பணிகளை ஆற்றியுள்ளதுடன் நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தின் உயிர்ப்பையும் தக்க வைப்பதில் தனது சட்டத்துறை மூலம் முக்கிய வகிபாகத்தை செய்து வந்திருக்கின்றார். மேலும் குடியியல் வழக்குகள் பெண்களுக்கு எதிரான அத்து மீறல் செயற்பாடுகள்
தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகி நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு போதும் பின் நின்றதில்லை. இவரின் திடீர் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள்