அநீதிகளுக்கு எதிராய் துணிந்து குரல் கொடுத்து வந்த துணிச்சலான பெண்மணி

கௌரிசங்கரி தவராசா என்னும் ஆளுமை என்னை மிகவும் பாதித்த ஆளுமைகளில் ஒன்று. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் அறுவடைகளில் ஒன்றாக நான் அவரை அறிந்தபோது பெருமைகொண்டேன். மகாஜனாக் கல்லூரியின் தாரக மந்திரம் (“Know thyself” “உனை நீ அறி”) என்பதாகும். எனது கிராமமான பன்னாலையைச் சேர்ந்த ஆசிரியர் அமரர் செ.விநாயகரத்தினம் அவர்கள் மகாஜனாவில் கௌரிசங்கரி அவர்களுக்கு ஆசிரியராக இருந்து பின்பு எனக்கும் ஆசிரியராக இருந்தமையினால் நான் சட்டத்தரணி ஆகிய பின்பு என்னை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கௌரிசங்கரி அவர்களைப் பற்றி என்னிடம் விசாரித்து அறிந்து கொள்வார். அவருடைய பேச்சாற்றலைப் பற்றியும், திறமைகளைப் பற்றியுமான தனது நினைவுகளை பலதடவைகள் என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கௌரிசங்கரி அவர்கள் தன்னைத் தானே அறிந்து கொண்டவராக தானகவே அவர் வெளித்தெரிய மகாஜனாக் கல்லூரி அவருக்கு வழிசமைத்திருந்தது. என்னுடைய சட்டத்துறை குருநாதரான ஜனாதிபதி சட்டத்தரணி அமரர் யு.சு.சுரேந்திரன் அவர்களுடைய பால்ய நண்பர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி மு.ஏ.தவராசா அவர்களும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி அவர்களும் சட்டக் கல்லூரியில் சமகாலத்தில் இணைந்து கொண்டமையினால் இவர்களிடையேயான நட்பு வட்டத்திற்குள் இருந்த பசுமையான நினைவுகளை நானும் அறிந்து கொள்ள முடிந்தது. அதில் குறிப்பாக தவராசா அவர்களுடன் வழக்கொன்றில் தெரிபட்டிருந்த சுரேந்திரன் அவர்கள் ஒருமுறை தவராசா அவர்கள் தனது காற்சட்டைக்கு ஒப்பான விதத்தில் அழகான இடுப்புப்பட்டி (Belt) ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டு தவராசா அவர்களிடம் “இந்த அழகான இடுப்புப்பட்டியை எங்கே வாங்கினீர்கள்” எனக் கேட்க  உடனே தனது இடுப்புப்பட்டியைக் கழற்றிச் சுரேந்திரனிடம் கொடுத்துவிட்டார் தவராசா அவர்கள். இவ்வாறு நட்பிற்கு இலக்கணமாய் இருந்த தவராசா அவர்களிடம் கௌரிசங்கரி அவர்கள் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததும் பின்னர் இந்த
இரு ஆளுமைகளின் சேர்க்கையும் அதன் ஒருமித்த வெளிப்பாடும் தமிழ்ச் சமூகத்தின் சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களின் அசைவியக்கத்தில் காத்திரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருந்ததும் யாமறிந்த ஒன்றே. சட்டத்துறையில் தம்பதிகளாக இணைந்து இவர்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது. விடுதலைப் போராட்ட காலங்கங்களில் சட்டத்தரணிகள் எவரும் கையாள விரும்பாத அல்லது கையாளத்தயங்கிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் சார்பாக தெரிபட்டு துணிச்சலாக தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தியவர்கள். யுத்தம் கொடூரமாக இடம்பெற்ற காலங்களில் டீடீஊ தமிழோசையில் இரவுச் செய்திகளின்போது முறையற்ற கைதுகள் பற்றியும் தமிழ்க் கைதிகளின் மீதான ஒடுக்குமுறை பற்றியும் சட்டத்தரணியாக கௌரிசங்கரி அவர்கள் துணிந்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து வந்தார். தமிழ்கைதிகளிடம் பலவந்தமாக பெறப்படும் வாக்குமூலங்களை வைத்துக்கொண்டு அரசு
வேண்டுமென்றே போலியாக புனைந்த வழக்குகளில் அதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணர்ந்தவர் கௌரிசங்கரி அவர்கள். “சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை“சொல லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து”வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து” எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க சட்டத்துறையில் தனது வாதத்திறமையால் எதிர்த்தரப்பினரை வாயடைக்கச் செய்தவர். அடிப்படை உரிமை வழக்குகள், அரசியல்சார் வழக்குகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என பரந்துபட்டவகையில் வழக்குகளை கையாண்டுள்ளதுடன் பலதீர்க்கப்பட்ட வழக்குகளில் முன்னுதாரணமான பல தீர்ப்புக்களையும் நீதித்துறையிடமிருந்து பெற்றும்கொடுத்துள்ளார். இவ்வாறு பல்துறை ஆற்றல் கொண்டிருந்த கௌரிசங்கரி அம்மையார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினரும் கூட. இவரது இழப்பின் மூலமான வெற்றிடம் இட்டு நிரப்பமுடியாத ஒன்றே. அன்னார் ஆற்றிச் சென்றிருக்கும் பணிகள் என்றும் எம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் என்பதுடன் என்றும் அவரை எம் நினைவில் வைத்திருக்கும். “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”பெருமை உடைத்துஇவ் வுலகு” என்னும் வள்ளுவன் வாக்கின் வழி நின்று “நேற்று இருந்த ஒருவன் இன்று எம்மத்தியில் இல்லை” என்னும் வாழ்வின் நிலையாமைப் பற்றிய உண்மையை உணர்ந்து சாந்தி
கொள்வோமாக.

நடராஜர் காண்டீபன்
சட்டத்தரணி
தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்