சட்டப்போராளி கௌரிசங்கரி தவராசாவின் மறைவு நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு பேரிழப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண்ணுரிமைக்காகவும் செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் இழப்பானது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அன்றுதொட்டு இன்றுவரை கௌரிசங்கரி தவராசா பாடுபட்டு வந்தவர். அவரது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையில் அவர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தார். மனித உரிமை விவகாரம் தொடர்பிலும் பெண் விடுதலை மற்றும் உரிமை தொடர்பிலும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தவர். தன்னை நம்பி வந்தவர்களுக்காக எத்தகைய இடர்களுக்கு மத்தியிலும் சளைக்காது சட்ட பணியாற்றிய ஒருவராகவே இவர் திகழ்ந்தார். மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாகச் சட்டத் துறையில் பணியாற்றி சாதனை படைத்ததுடன் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரான தனது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அரசியல் விவகாரத்திலும் பக்கத்துணையாக அவர் செயலாற்றி வந்தார் தமிழ்த் தேசியப் பரப்பிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருந்தார். சட்டத்துறையில் சிங்கப் பெண்ணாக திகழ்ந்த கௌரி சங்கரி தவராசாவின் இழப்பானது தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல நாட்டில் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் சகலருக்கும் பேரிழப்பாகும்.

திருமதி விஜயகலா மகேஸ்வரன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்